லிங்க வடிவ சனீஸ்வரர்

லிங்க வடிவ சனீஸ்வரர்

நவக்கிரகங் களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். வேலூர் அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் யந்திர பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவில் சிலை வடித்தார். சிறிய கோயிலும் எழுப்பப் பட்டது. காலவெள்ளத்தில் கோயில் இடிந்து, சிலை திறந்தவெளியில் இருந்தது.

பின்னர் பக்தர்கள் மீண்டும் கோயில் எழுப்பினர். யந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால், இவரை 'யந்திர சனீஸ்வரர்' என்கின்றனர்.சுவாமி அமைப்பு: இங்கு சனீஸ்வரரே மூலவர். பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள லிங்க சனீஸ்வரர் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் காட்சியளிக்கிறார். சிலையின் மேல்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும், நடுவில் காகமும் உள்ளன. மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள 'ஷட்கோண யந்திரம்' உள்ளது. இச்சிலையில் 'நமசிவாய' மற்றும் சில மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.கூரை கிடையாது: சுற்றிலும் வயல்வெளிகள் இருக்க, அதன் மத்தியில் அமைந்த கோயில் இது. கோயில் முகப்பில் தேர் ஒன்றை ஐந்து காகங்கள் இழுத்து வருவதும், அதில் சனீஸ்வரர் அமர்ந்திருப்பது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

முன் மண்டபத்தில் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் உள்ளனர். சுவாமி பல்லாண்டுகளாக சன்னதி இல்லாமல் இருந்ததன் அடிப்படையில், தற்போதும் சனீஸ்வரர் சன்னதியில் மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் அனைத்தும் சனீஸ்வரர் மீது விழும்படியாக சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு. சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் (காலை 6 - 7.30 மணிக்குள்) அபிஷேகம், கோபூஜை, யாகசாலை பூஜை நடக்கும். காணும் பொங்கல் பண்டிகையன்று இவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கும்.தண்ணீர் வடிவில் சூரியன்: சனீஸ்வரரின் தந்தை சூரியபகவான் இங்கு தீர்த்தமாக இருப்பதாக ஐதீகம். சூரியனுக்கு 'பாஸ்கரன்' என்று பெயருண்டு. எனவே இந்த தீர்த்தத்தை 'பாஸ்கர தீர்த்தம்' என்பர். இந்த தீர்த்தத்தால் தான் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சூரியனும், சனியும் பகை கிரகங்கள். இருப்பினும், இங்கு சனீஸ்வரருக்கு பாஸ்கர தீர்த்தத்தால், அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருகிறார்கள். இதை பருகுபவர்களுக்கு, சூரியன், சனியினால் ஏற்படும் தோஷங்கள் ஒருசேர நீங்கும் என்பது நம்பிக்கை.பிரார்த்தனை: சனிப்பெயர்ச்சியை ஒட்டி நடக்கும் ஐந்து நாள் விழாவில், பரிகார ஹோமம் நடத்தப்படும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, வழக்குகளில் வெற்றி பெற இங்கு வழிபடுகிறார்கள். சனிபகவான் மனிதர்களின் ஆயுள், தொழிலை நிர்ணயம் செய்பவராக இருக்கிறார். எனவே, தீர்க்காயுளுடன் இருக்கவும், தொழில் சிறக்கவும் இவருக்கு எள் தீபமேற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.இருப்பிடம்: திருவண்ணாமலையில் இருந்து 58 கி.மீ., வேலூரில் இருந்து 41 கி.மீ., தூரத்திலுள்ள ஆரணி சென்று, அங்கிருந்து படவேடு செல்லும் வழியில் 9 கி.மீ., சென்றால் ஏரிக்குப்பத்தை அடையலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை- வேலூர் சாலையில் (50 கி.மீ.,) உள்ள சந்தவாசல் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., சென்றாலும் இத்தலத்தை அடையலாம். சனிக்கிழமைகளில் ஆரணியில் இருந்து ஸ்பெஷல் பஸ்கள் விடப்படுகின்றன.திறக்கும் நேரம்: காலை 8- மதியம் 1 மணி, மாலை 3- இரவு 7 மணி. சனிக்கிழமைகளில் காலை 6- இரவு 9 மணி.போன்: 04173- 229 273, 93602 23428.