திருக்கார்த்திகை திருவிளக்கு பூஜை!

திருக்கார்த்திகை திருவிளக்கு பூஜை!

திருக்கார்த்திகையன்று மாலையில் வீட்டில் தீபமேற்றியதும், பெண்கள் இந்தப்பாடலை, திருவிளக்கின் முன் அமர்ந்து ஒருமித்த மனதாகப் பாட வேண்டும். மகாலட்சுமியின் அருள் பூரணமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒரு மலர் தூவி வழி படலாம்.

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன் பிறப்பே! 
ஜோதி மணிவிளக்கே! 
சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே! 
அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே!
காமாட்சி தாயாரே! 

பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு 
குளம் போல் எண்ணெய்விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்,
ஏற்றினேன் நெய்விளக்கு
எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு
மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
யான் தரணியிலே ஜோதியுள்ள
தாயாரைக் கண்டுவந்தேன்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா!
பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா!
பக்கத்தில் நில்லுமம்மா!
அல்லும்பகலும் எந்தன்
அண்டையிலே நில்லுமம்மா!
சேவித்து எழுந்திருந்தேன்
தேவி வடிவங்கண்டேன்
வச்சிரக் கிரீடங்கண்டேன்
வைடூரியமேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்
முழுப்பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன்
தாழைமடல் சூடக் கண்டேன்
மின்னழகு கண்டேன்
பிறைபோல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்
தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன்
கோவைக்கனி வாயும் கண்டேன்
கமலத் திருமுகத்தில் 
கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன
மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகல என
கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டிபாணம் தகதகவென
ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன்
காலணி பீலி கண்டேன்
மங்கள நாயகியை
மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன்
அடியாள் நான்
அன்னையே அருந்துணையே!
அருகிருந்து காருமம்மா!
வந்தவினையகற்றி
மகாபாக்கியம் தாருமம்மா!
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணித்தேன்

இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் தீபாராதனை செய்து வேண்டிய வரங்களைத் தந்துருளும்படி பிரார்த்திக்க வேண்டும்.