கமல மலரில் தவழ்ந்த கமலவல்லி!

கமல மலரில் தவழ்ந்த கமலவல்லி!

பெருமாள் - அழகிய மணவாளன் நின்ற கோலம் வடக்கே திருமுக மண்டலம், தாயார் - வாஸலக்ஷ்மீ, உறையூர் வல்லி, விமானம் - கல்யாண தீர்த்தம் குடமுருட்டி நதி, ப்ரத்யக்ஷம் - ரவிதர்மராஜன், கோடி தேவர்கள், மங்களாசாசனம் - திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம், குலசேகராழ் வார் ஒரு பாசுரம், திருச்சியிலிருந்து 3 கி.மீ. தூரம்.

 
உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன் என்னும் மன்ன னுக்கு புத்திரப்பேற்றின்மையைப் போக்க பரந் தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக் கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரி யாகுமாறு அருளினார். உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக அவதரிக்க, வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அம்மகவைக் கண்டெடுத்தான். கமல மலரில் கண்டெடுத்தமை யால் கமலவல்லி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தாள். கமலவல்லி திருமணப் பரு வம் எய்தினாள். ஒருநாள் ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி வனத்தில் வேட்டைக்கு வந்தது போல் உலா வர, தோழிமாருடன் அப்பக்கம் வந்த கமலவல்லி, எம்பெருமான் பேரழகைக் கண்டு காதல் வயப்பட்டாள். காதல் மோகத்தில் பக்தி வெள்ளத்தில் திளைக்கலானாள் கமலவல்லி.
 
மகளின் நிலைக் கண்டு மன்னன் சிந்தனையில் மூழ்கியிருக்க, அவன் கனவில் வந்த பெருமான் குழந்தைப் பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை அனுப்பினோம். என் சன்னதிக்கு அழைத்துக் கொண்டு வா, ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்ல, மிக வியந்து மகளை பலவாறாய் துதித்துப் போற்றி நகரை அலங்கரித்து கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் ஸ்ரீரங்கம் அழைத்து வர, கோவிலினுள் நுழைந்ததும் கமலவல்லி மண்ணியல்புக்கு மறைந்து அரங்கனோடு இரண் டறக் கலந்தாள். சேனை பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான் பெற்ற பெரும் பேற்றை எண்ணி வியந்து ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான். ஸ்ரீரங்கநாதனே அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால் அழகிய மணவாளன் ஆனார்.
 
ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டணம் முழுகிப்போக அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி ஆண்டு வருகாலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவன் இக்கோவிலில் அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல வல்லியையும் பிரதிட்டை செய்தான்.
 
சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானையொன்று இவ்வூருக்குள் வந்த போது ஒரு கோழி அதனையெதிர்த்து யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும், அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புற முதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்று பெயருண்டாகித் திருக்கோழியாயிற்று என்றுரைப்பர்.
 
N. கிருஷ்ணமூர்த்தி