காலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது?

காலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது?

சதுர வடிவில் இருக்கும் மனை முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.

சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது.

சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை வருகிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். 40க்கு 60 அல்லது 60க்கு 40 என்ற நீள-அகலத்தில் உள்ளது செவ்வக மனைகளாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களுக்கு இதுபோன்ற அமைப்புடைய மனை ஏற்றத்தைத் தரும்.

பொதுவாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வதற்கு தகுதியானவை. இவை தவிர பாம்பு மனை (நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருப்பவை- 30க்கு 120) என்று குறிப்பிடும் அமைப்பில் மனைகள் உள்ளன.

பாம்பு மனைகளில் வீடு கட்டி குடியேறினால் அந்தக் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து நோய்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பாம்பு மனை போன்ற அமைப்பை உடையவர்கள், வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் எழுப்பும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக விட்டு விடலாம்.

ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால், பாம்பு மனையில் தரைத்தளத்தை வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாக மாற்றி விட்டு, முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பாம்பு மனையால் ஏற்படும் தாக்கத்தை (நோய், வழக்கு, திடீர் மரணம், விபத்து) குறைத்து விட முடியும்.